CT

அண்மை பதிவுகள்

நம்பிக்கை - அதானே எல்லாம்...

trustpic



நம்பிக்கை... அதானே எல்லாம்
“நீ பிறப்பதற்கு முன்பே
உன் உணவிற்காக
உன் தாயின் மார்பகங்களில்
பாலினைச் சுரக்கச் செய்தவன் இறைவன்...”
-யாரோ
நம்பிக்கை தரும் வரிகள் இவைகள். இந்த உலகம் நம்பிக்கை என்னும் வார்த்தைகளால் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தும் வரிகள். இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்னே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை விதைகளை நம்மிடையே விதைக்கும் வரிகள்.
அடுத்த நகர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மனிதனையே வெற்றியும் எதிர்கொள்கிறது. நல்ல நம்பிக்கைகள் ஒருபோதும் தோற்பதில்லை என்பதே வாழ்ந்து காட்டிய மகான்கள் விட்டுச்சென்ற உண்மையாகும்.

     நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும். அவை நல்ல நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். நேர்மறை நம்பிக்கையாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு திருமணப்பத்திரிக்கை வந்தது. நண்பரின் திருமணம்... தேதியை பார்த்ததும் அசந்து போனேன். திருமணம் நடக்கும் நாள் 22.12.2012.  உலகமே அழிந்துவிடும் என்று அவநம்பிக்கைவாதிகள் குறித்த தேதி அது.

     உடனே நண்பனுக்கு தொலைபேசியில் இரண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன். முதல் வாழ்த்து அவனின் திருமணத்திற்கு. இரண்டாவது வாழ்த்து அவன் தேர்ந்தெடுத்த நாளுக்காக. உலகமே பயந்து ஒதுக்கிய அந்த நாளை நம்பிக்கையோடு தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்த அந்த நண்பரைப்போல நம்பிக்கையுடையவர்களால்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

     அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும். நமக்கெல்லாம் இது நடக்குமா?...”

     நம்மோடு இருக்கும் சிலரின் முணுமுணுப்புகளை நாம் கேட்டதுண்டு. நம்பிக்கை இழந்து பேசும் நண்பர்களைப் பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கும். தனது இயலாமையை வெளிப்படுத்த அவர்களுக்குக் காரணம் வேண்டும் இல்லையா? அந்தக் காரணம்தான் முணுமுணுப்பாகவும், புலம்பல்களாகவும் வெளிவருகிறது. தயவு செய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும், அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள்.

     வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்குக் கண்டங்களையும், கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு வருகிறது. தனது இலக்கை நோக்கி பயணம் செய்யும் பறவைகள் நமக்கு நம்பிக்கையைக் கற்றுத்தந்து விடுகிறது.

நேர்மறைச் சிந்தனைகளை விட எதிர்மறைச் சிந்தனைகளே நம்மில் பலருக்கு அதிகம். “கடைக்கு போய் சாமான் வாங்கிட்டு வாடா” என்றால் “கடை பூட்டியிருந்தால் என்ன செய்ய?” என்ற சாதாரண கேள்வியில் இருந்து தொடங்குகிறது நமது எதிர்மறைச் சிந்தனைகள்.

ஒரு சிறிய கதை உங்களுக்காக...

     கனவுகளைச் சுமந்து நிற்கும் இளைஞன் அவன். சிறு வயதில் இருந்தே அவன் எதிர்மறைச் சிந்தனைகள் நிரம்பி காணப்பட்டவன். “நான் படிச்சு என்ன செய்யப்போறேன்...? இதுவரைக்கும் படிச்சவன்லாம் என்ன பண்ணிட்டான்?..” இது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுபவன். “நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற பி.எஸ். வீரப்பாவின் வசனங்கள்தான் அவனுக்கு மிகவும் பிடித்த வசனங்கள்.

     வீட்டில் யார் எது சொன்னாலும் கேட்பதில்லை. நல்ல விஷயங்கள் எல்லாம் அவனது ஒரு காது வழியே புகுந்து மறு காது வழியே வந்து விடும். இவனை என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு நிறைவாக குருவிடம் அழைத்துச் சென்றார் இளைஞனின் தந்தை. “ குருவே ! இவனை நீங்கள் தான் மாற்ற வேண்டும் எதைச் சொன்னாலும் எதிர்மறையாகவே செய்கிறான்” என்றார்.குருவோ சற்று நிதானமாகக் கேட்டுவிட்டு “இந்த உலகத்தில் யாரும் யாரையும் திருத்த முடியாது. தவறுகளை உணரச்செய்வதன் மூலமே ஒருவரை மாற்ற முடியும். இவனின் தவறுகளை உணர வைக்க முயற்சி செய்கிறேன். உங்கள் மகனை என்னிடம் இரண்டு நாட்கள் விட்டு விடுங்கள். திரும்பி வரும்போது திருந்தி வருவான்” என்றார்.
gurupic


மறுநாள் வழக்கம்போல் தான் விடிந்தது. குரு அந்த இளைஞனை அழைத்தார். “மகனே! இன்று உனக்கு ஆசிரமக் கூரைகளை வேயும் பணியினைத் தருகிறேன்” என்று கூறிவிட்டு கையில் ஒரு பெரிய உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். நீ சாப்பிட்ட பின்பு மீதமுள்ளதை உன் இடையில் கட்டி தொங்கவிட்டுக்கொள். எந்தக் காரணம் கொண்டும் அதனை கீழே வைத்துவிடாதே. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டார்.

      காலை உணவு நேரம் வந்தது. பொட்டலத்தைப் பிரித்தான் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதை பொட்டலம் கட்டி இடையில் தொங்கவிட்டான். மதிய உணவு நேரம் வந்தது வெயிலின் காரணமாகவும், ஏற்கனவே சாப்பிட்டதாலும் உணவு கெட்டு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. தண்ணீர் குடித்துவிட்டு வேலையைத் தொடங்கினான். சிறிது நேரத்தில் குரு வந்தார் இளைஞனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. பொட்டலத்தைக் கொடுத்துவிடலாம் என் குருவிடம் சென்றான், அவர் அதை வாங்கவில்லை. “வைத்திரு வாங்கிக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.                             

     மாலை நேரம் கடந்தது இரவு வந்தது பொட்டலத்தின் துர்நாற்றத்தால், கொசுக்களும்-ஈக்களும் அவனைத் தூங்கவிடவில்லை.
காலைப்பொழுது விடிந்தது குரு வந்தார். உடனே அந்த இளைஞன் குருவே இந்த பொட்டலத்தை வாங்கிக்கொள்ளுங்கள் இனி இதை என்னால் வைத்திருக்க இயலாது என்றான். குரு நிதானமாக “இதை நான் ஏன் வாங்கிக்கொள்ள வேண்டும்?” என்றார். “இது கெட்டுப்போன உணவுப்பொட்டலம், இதன் துர்நாற்றத்தால் என்னால் இதை சுமக்க முடியவில்லை” என்றான் இளைஞன்.

குரு இளைஞனுக்கு கூறிய பதிலில் தான் மொத்த கதையின் அர்த்தமும் அடங்கியுள்ளது. குருவின் பதில்:

கெட்டுப்போன உணவினை உன்னால் ஒருநாள் கூட சுமக்க முடியவில்லை, ௨௦ வருடங்களாக கெட்டுபோன மனதினை எப்படிச் சுமந்து கொண்டிருக்கிறாய். உடனடியாக அதனை அகற்றி எறி...” என்பதுதான்.

தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.. நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்போம். குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள்.

நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது.
மனதினை அவ்வபோது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. தகுந்த பயிற்சியும், தொடர் முயற்சியுமே போதுமானது.

நம்மில் பலருக்கு விழிப்பதற்கும், எழுவதற்குமே அதிக இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

மனம் சொன்னபடி நடப்பவர் சாதனையாளர் ஆகிறார். உடல் சொல்வதை கேட்பவர்கள் சராசரி மனிதர்களாக வாழ்ந்து(?) கொண்டிருக்கிறார்கள்.  நல்ல நம்பிக்கையோடு செயல்படும் அனைவருமே சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள் என்பதே சரித்திரம் நமக்குத் தரும் பாடமாக உள்ளது. நம்பிக்கையோடு செயல்படுங்கள்... வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

நல்லவர்களிடம் பேசும் போதே
நம்பிக்கை பிறந்துவிடுகிறது.

நா. சங்கரராமன் 
அறிவுரைகள் ஜாக்கிரதை 

1 comment:

  1. நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது.
    மனதினை அவ்வபோது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. தகுந்த பயிற்சியும், தொடர் முயற்சியுமே போதுமானது.

    unmai...

    ReplyDelete